tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரெழுச்சி

தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட பேரணிகள்

சென்னை, பிப். 19- அரசியலமைப்புச் சட்டத்தையே சிதைக்கும் பாஜக அரசை அப்புறப்படுத்துவோம், மதச்சார் பின்மையை சீர்குலைக்கும் சிஏஏ, என்.பி.ஆர்,  என்.ஆர்.சி.யை எதிர்த்து சாதி மத பேதங்களை கடந்து ஒன்றுபட்டு போராடுவோம் என சென்னை யில் நடைபெற்ற பேரணியில் தலைவர்கள் சூளு ரைத்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற  வலியுறுத்தியும், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய வற்றை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைமை யிலான இஸ்லாமிய அமைப்புகள், அனைத்துக் கட்சி கூட்டமைப்பு சார்பில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டமும், மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் புதனன்று (பிப். 19) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

காவல்துறை தடுப்புவேலி

போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஜமாஅத்துல் உலமா  சபை செவ்வாய்க்கிழமை (பிப். 18) இரவு அறி வித்தது. அதையொட்டி புதன்கிழமை காலை 9 மணி  முதலே கலைவாணர் அரங்கம் அருகே மக்கள்  குவியத் தொடங்கினர். பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். சட்டமன்ற நுழைவு வாயில், அண்ணாசிலை, சிம்சன் பெரியார் சிலை, காமராஜர் சாலை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, நேப்பியர் பாலம், தீவுத்திடல், சிவானந்தா சாலை என அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

கேமரா மூலம் கண்காணிப்பு 

4 டிரோன் கேமிரா மூலமும் பேரணி கண்காணிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான காவல் துறையினர் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை யை தாண்டிச் செல்லாமல் இருக்க முள் வேலி அமைத்த இரும்பு தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. ஒரு பேரணிக்கு தனியாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை யின் தலைவர் காஜா மொய்தீன் தலைமை யில் சரியாக 10.30 மணிக்கு பேரணி துவங்கி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நிறைவடைந்தது. தலைவர்கள் முன்னே அணிவகுக்க வாலாஜா சாலையின் ஒரு புறத்தில் ஆண்களும், மற்றொரு புறத்தில் பெண்களும் என லட்சக்கணக்கானோர் பேரணியில் அணிவகுத்து வந்தனர். மத்திய  மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங் களை எழுப்பினர். பின்னர் அங்கு அமைக்கப் பட்டிருந்த மேடையில் தலைவர்கள் உரை யாற்றினார்கள்.

அனைவருக்குமான போராட்டம்

ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் காஜா மொய்தின் பேசுகையில், குஜ ராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போது ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் ரத்ததானம் செய்தனர். சென்னையிலே பெரு வெள்ளம் ஏற்பட்ட போது அனைத்து பகுதிகளுக்கும் சென்று உதவினார்கள். கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது தமிழகத்தில் ஜமாத்  மூலம் 40 லட்சம் ரூபாய் வசூல்செய்து அளிக்கப்பட்டது. இப்படி சாதி, மதம், இனம் கடந்து அனைவரும்தமிழர்கள், இந்தியர்கள், நம்முடைய சகோதரர்கள் என்ற அடிப்படையில்தான் உதவுகிறோம். அவர்களும் நமக்கு உதவுகிறார்கள். இந்த  போராட்டம் அனைவருக்குமான போரா ட்டம். இந்த போராட்டம் தொடரும்என்றார்.

தீர்மானம் நிறைவேற்றுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேசுகையில், தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்ப தற்கு உத்தரவாதம் தர தமிழக முதல மைச்சர் தயாராக இல்லை. அரசியல் நிர்ப்ப ந்தங்களுக்கு அடிபணியாமல் மக்களின் கோரிக்கைகளை ஏற்று நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் எனவும் அதிமுக அரசு  தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்றார்.

இலங்கை அகதிகளுக்கு சேர்த்தே போராட்டம்

திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி பேசுகையில், என்.பி.ஆர்.  என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல், இந்துக்களுக்கும் எதிரானது.  50ஆண்டு களுக்கும் மேலாக தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை அகதிகளுக்கும் சேர்த்தே  இஸ்லாமியர்கள் போராடுகின்றனர் என்றார்.

செல்லாதவர்களாக ஆக்குவதா?

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசுகையில்,சிஏஏவின் தலைவாசல் என்பிஆர். 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டை செல்லாது என்று அறி வித்ததைப் போல இந்தியர்களை செல்லா தவர்களாக ஆக்கும் சட்டம்தான் தேசிய குடி யுரிமை திருத்தச் சட்டம். அதிமுக கூட்டணி அளித்த 11 வாக்குகளால்தான் இந்த சட்டம் நிறைவேறியது. குடியுரிமை சட்டம் இந்திய மக்களின் குடியை கெடுக்கும் திட்டம். பாஜக போன்று அதிமுகவிற்கும் தமிழகத்தில் எதிர்காலம் இல்லை என்ற நிலையை மக்கள் உருவாக்குவார்கள் என்றார்.

இடதுசாரிகள் ஓயமாட்டார்கள்

சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசுகையில், என்ஆர்சி, என்பிஆர் இந்திய மக்களுக்கு எதிரானது. மக்கள் விரோத ஆட்சியாளர்களை அடித்து விரட்டும் வரை இடதுசாரிகள் ஓயமாட்டார்கள் என்றார். 

கொடிய விஷமுள்ள பாம்பு 

விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு பேசுகையில், இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல, ஜனநாயகத்திற்கு, மதச்சார்பின்மைக்கு, அர சியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எப்படி ஜெர்மனியில் ஹிட்லர் ஒரு சட்டத்தை கொண்டு வந்து யூதர்களை, கம்யூனிஸ்டு களை அழித்தானோ அதுபோன்ற கொடிய சட்டம் இது. இந்த சட்டத்தால் தமிழகத்தில் யாருக்காவது பாதிப்பா என முதலமைச்சர் கேட்கிறார். இரு இடத்தில் கொடிய விஷ முள்ள பாம்பு நுழைந்து விட்டால் அதை அடிப்போமா அல்லது யாருக்கு பாதிப்பு என கேள்வி கேட்போமா  என்றார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ  அபுபக்கர், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, எஸ்டிபிஐ கட்சி யின் தலைவர் நெல்லை முபாரக் உள்பட பலர் பேசினர். எஸ்.எம்.பார்க்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காசிப் ஒருங்கிணைத்தார். தேசியகீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

இதில் இந்திய தேசிய முஸ்லீம் லீக்  தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது, தனியரசு எம்.எல்.ஏ, அன்வர் பாஷா, பஷீர் (இந்திய தேசிய லீக்), ஜி.செல்வா (சிபிஎம்) உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சக்கணக்கானோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பதாகைகள், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி எந்த சலசலப்புமில்லாமல் கட்டுக்கோப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மன்னடி உள்ளிட்ட பல பகுதிகளில் அனைத்து  தரப்பு மக்களும் கடையை அடைத்து இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கோவை, மதுரை, திருச்சி

இதேபோல் கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் அனை த்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.








 

;